வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தனிமைப்படுத்தப்படுத்தல் ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்ட பல பகுதிகள் இன்று(18) விடுவிக்கப்பட்டது.
வவுனியா பட்டாணிசூரை சேர்ந்த கர்பிணி பெண் மற்றும் பல்கலைகழக மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த கிராமம் கடந்த நான்காம் திகதி முடக்கப்பட்டிருந்தது. அதேபோல வவுனியா நகரப்பகுதியில் தொற்றாளர்கள் அதிகரித்துவந்த நிலையில் பிரதான நகரம் உட்பட்ட 19 கிராமசேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குசட்டம் கடந்த ஒருவாரமாக அமுல்படுத்தப்பட்டிருந்தது.
அவற்றில் பசார்வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தைவீதி, கந்தசாமிகோவில் வீதி, மில் வீதி, சூசைப்பிள்ளையார்குளம் வீதிகள் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பகுதிகள் இன்றுகாலை விடுவிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் மற்றும் தினச்சந்தை ஆகியன திறக்கப்படாத நிலையில் குறித்த வீதியால் பொதுமக்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.