வடக்கில் நேற்று 50 பேருக்கு கொரோனா தொற்று – கேதீஸ்வரன்

கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் நேற்று 50 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் மன்னாரைச் சேர்ந்த 23 பேருக்கும், வவுனியாவைச் சேர்ந்த 6 பேருக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் சங்கானையைச் சேர்ந்த ஒருவருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபையின் புத்தளம் சாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்குத் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றும் சங்கானையைச் சேர்ந்த ஒருவர் அண்மையில் வீடு திரும்பினார்.

அவர் சுயதனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மாதிரிகள் பெறப்பட்டு நேற்று பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன்போது அவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அறிக்கை கிடைத்துள்ளது.

இதேவேளை வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வவுனியா நகர கொத்தணியுடன் தொடர்புடைய 154 பேரின் மாதிரிகள் ஸ்ரீ ஜயவர்த்தனபுர ஆய்வுகூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவர்களில் 20 பேருக்குத் தொற்றுள்ளமை நேற்றைய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.