வவுனியா தவசிகுளம் மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்க முடியும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சமூகவியலாளர் ச.கோபிநாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் தவசிக்குளம் பகுதியில் நீர் வழங்கல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான நீரிணைப்புக் குழாய்களை பொருத்தும் பணியானது தற்போது நிறைவுபெற்றுள்ளது.
அதன் தொடர்ச்சியாக தவசிக்குளம் பகுதியில் வாழும் மக்கள் தங்களுக்கான குடிநீரிணைப்பினை பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பின் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வவுனியா பிராந்திய முகாமையாளர் காரியாலயத்தில் அல்லது வவுனியா நிலைய பொறுப்பதிகாரி காரியாலயத்திலும் தங்களுக்கான விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் எதிர்வரும் 01.02.2021 திங்கள் அன்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நிர்மாணப்பிரிவினரால் தவசிக்குளம் கிராம சேவகர் பிரிவில் நடாத்தப்பட இருக்கின்ற நடமாடும் சேவையினூடாகவும் தங்களுக்கான நீரிணைப்பினை பெறுவதற்குரிய விண்ணப்பப்படிவங்களைப் பெற்று தமக்குரிய பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.