சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் தொடர் போராட்டம்

Kilinochchi Protest 16
Kilinochchi Protest 16

விடுதலைப்புலிகளிற்கு உதவிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் தொடர் போராட்டம் இன்று ஆரம்பமானது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஒன்று கூடிய உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏ9 பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுகொண்டிருந்த நிலையில் போக்குவரத்து சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.

இதேவேளை கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தினை சீர் செய்ய முற்பட்டனர். ஆயினும் போக்குவரத்தினை முழுமையாக சீர் செய்ய முடியாத நிலையில் அதற்கு ஒத்துழைக்குமாறு காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் கேட்டனர். அதற்கு அமைவாக வீதியின் ஒரு பகுதியின் ஊடான போக்குவரத்து இடம்பெற்றது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி தலைமை காவல்துறை அதிகாரி தலைமையிலான காவல்துறையினர் போராட்டகாரர்களை வீதியிலிருந்து அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிற்கும் காவல்துறையினருக்கும் இடையில் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் இன்று முதல் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கின்றனர். குறித்த போராட்டம் பந்தல் அமைக்கப்பட்டு இன்று முதல் தொடர் போராட்டமாக கைதானவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.