மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் கிளிநொச்சி தெளிகரை மக்கள்

Thelikarai 4
Thelikarai 4

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தெளிகரை பகுதியில் புதிதாக குடியேற்றப்பட்ட மக்கள் மழை காலம் முடிந்து வெள்ளத்திலிருந்து மீள முடியாத நிலையில் வாழ்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தெளிகரை மக்கள் இவ்வாறு வருடம் தோறும் வெள்ள தேக்கத்தில் சிக்கி தவிப்பதாக தெரிவிக்கின்றனர். மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள குறித்த குடியிருப்பு பகுதியில் வெள்ளம் தேங்கி உள்ளது. மழை வெள்ள அனர்த்தம் முடிந்து நீண்ட நாட்களாகியும் குறித்த பகுதி மக்கள் வெள்ள அனர்த்தத்திலிருந்து மீள முடியாத நிலையில் உள்ளனர்.

தம்மை குறித்த பகுதியில் குடியேற்றம் போது அப்பகுதி பள்ளமான பகுதி எனவும், அபிவிருத்தி செய்து தருவதாகவும் தெரிவித்திருந்ததாகவும் தெரிவிக்கும் மக்கள், வருடம் தோறும் இவ்வாறான வெள்ள நிலையிலேயே தாம் வாழ்வதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தாழ்வு நில பகுதி என தெரிந்தும் அபிவிருத்தி என்ற போர்வையில் குடியேற்றப்பட்ட தமக்கு இன்று வரை நிவர்த்தி செய்யப்படாத நிலையே காணப்படுவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட குறித்த வீட்டுத்திட்டமும் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர்கள், தமது பிரச்சினைகளிற்கு தீர்வு பெற்றுத்தர எவரும் முன்வரவில்லை எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு வெள்ளத்தால் சூழ்ந்த நிலையில் தம்மால் தொடரந்து வாழ முடியாது எனவும், இதற்கான நடவடிக்கையினை துரிதப்படுத்தி தீர்வை பெற்றுத்தருமாறும் மக்கள் கோருகின்றனர்.