பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பல்வேறு வெளிநாட்டு பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.
பிரதமர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாட்டில் இருந்து வெளியேறும், வியட்நாம் தூதுவர் ஃபெம் தி பிக் என்கொக் (H. E. Mrs. Pham Thi Bich Ngoc) பிரதமரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் பிரதமர் விசேட சந்திப்பு 1
இதன்போது, வியட்நாம் மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள மாணவர் பரிமாற்ற வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த 2009ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவி வகித்த சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஸ வியட்நாமுக்கு விஜயம் செய்ததை நினைவூட்டிய அவர், மீண்டும் தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறும் அழைப்பு விடுத்தார்.
இதேவேளை, சீன துணைத் தூதுவர் மற்றும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ஆகியோர் பிரதமரை தனித்தனியாக சந்தித்துக் கலந்துரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.