வவுனியா நகரசபை ஊழியர் சத்தியாக்கிரக போராட்டம்!

IMG20210207103537 01
IMG20210207103537 01

வவுனியா நகரசபையின் ஊழியர் ஒருவர் நகரசபை நிர்வாகத்திற்கு எதிராக கடந்த 13நாட்களாக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

வவுனியா நகரசபையின் பொது நூலகத்தில் பணியாற்றி வந்த க.கோல்டன் என்ற நூலக பணியாளரே தனக்கு நகரசபை நிர்வாகம் அநீதி இழைத்துள்ளதாக தெரிவித்து சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,

கடந்த 20 வருடங்களாக பொதுநூலகத்தில் பணியாற்றி வருகின்றேன், நான் தொழிலாளர்களின் உரிமைக்காக கடந்தகாலத்தில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தேன் இதன் காரணமாக என்னை பழிவாங்கும் முகமாக எனக்கு நகரசபை நிர்வாகத்தினரால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

எனது பணியினை இடைநிறுத்தி என்னை நகரசபை பூங்காவில் சுத்திகரிப்பு பணியில் நகரசபை நிர்வாகம் அமர்த்தியுள்ளது. இதன் காரணமாக எனது பணியின் முன் அனுபவ காலம் பாதிக்கப்பட்டுள்ளது.
நகரசபை நிர்வாகம் என்னை பழிவாங்குவதை நிறுத்தி எனக்கு மீண்டும் நூலகத்தில் பணி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இப் போராட்டம் தொடர்பாக நகரசபை நிர்வாகத்திடம் கேட்டபோது குறித்த பணியாளரின் நியமனம் தொடர்பான வேலையே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட காலப்பகுதியில் சுழற்சி முறையில் பணியினை மாற்றி வழங்கும் முகமாகவே பணிமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அப்பணியாளருக்கு எங்களால் அநீதி இழைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து தனியாக போராடி வந்த நகரசபை பணியாளர் க.கோல்டனுக்கு ஆதரவு தெரிவித்து சக தொழிலாளர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளதுடன், இரவு பகலாக போராட்டம் இடம்பெற்று வருகின்றது.