வைத்தியசாலையில் நிலவும் சுகாதார சீர்கேடு

nai 1
nai 1

காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்திசெய்வதில் வைத்தியசாலை நிருவாகம் அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்து வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நோயாளர்களுக்கு மருந்து சுற்றிக்கொடுக்கும் காகிதங்களுக்கு மேல் குட்டைநாய் ஒன்று படுத்திருந்த விடயத்தை கண்டுபிடித்த தரப்பினருக்கும் பாதுகாக்கத் தவறிய தரப்பினருக்கும் இடையே முரண்பாடுகள் இடம்பெற்றிருந்தது.

காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் சுகாதார நடைமுறைகள் தொடக்கம் நோயாளர்களுக்கான பொது ஒழுங்கு வரை பல்வேறு குறைபாடுகள் நிலவி வருகின்றன. இவை தொடர்பாக பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் தரப்பில் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும் அவற்றை நிவர்த்திசெய்ய இதுவரை வைத்தியசாலை நிருவாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் நிலவுகின்ற சுகாதார சீர்கேடுகள் மற்றும் குறைபாடுகளாவன;

  • நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலைப் பணியாளர்கள் பயன்படுத்தும் மலசலகூடங்கள் சுகாதார முறையில் சுத்தம் செய்யப்படுவதில்லை.
  • சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் திரவங்கள் போத்தல்களுடன் அடிக்கடி காணாமற் போகின்றமை.
  • சுகாதாரமான முறையில் பாதுகாக்கப்படவேண்டிய பொருட்கள் நிலத்தில் வைக்கப்பட்டுள்ளமை.
  • நோயாளர்களுக்கு மருந்துகள் சுற்றிக்கொடுக்கும் காகிதாதிகள் அடங்கிய பொதி உரிய முறையில் பாதுகாக்கப்படவில்லை.
  • பாதுகாப்பற்ற அறை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த காகிதாதிகளுக்கு மேல் நாய்கள் படுத்துறங்குகின்றமை.
  • மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய காவு வண்டியிற்கு சாரதியின்மை.

காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் நிலவும் இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்ய யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.