ஒரு ஏக்கர் பரப்புக்கும் அதிகளவில் காணியை கொண்டுள்ள விவசாயிகளுக்கு துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் கருத்துரைத்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடப்பட்ட பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வனங்கள் அழிக்கப்பட்டு விவசாயம் மேற்கொள்ளப்படுவதானால் வனவிலங்குகளுக்கு உணவில்லாத பிரச்சினை ஏற்படுகின்றது.
எனவே, வனவிலங்குகள் உணவு தேடி விவசாய நிலங்களுக்குள் பிரவேசிக்கின்றன.
இதன் காரணமாக விவசாயத்துறைக்கு 25%மான நட்டம் ஏற்படுகின்றது.
அவற்றிலும் அதிகமான பாதிப்பு காட்டுயானைகளின் பிரவேசம் காரணமாகவே இடம்பெறுவதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் யானை தாக்கி பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் தாக்குதல் காரணமாக மக்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் தமது வீட்டுக்கு அருகாமையில் குறித்த தாய், யானை தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த குறித்த தாய் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் திக்கோடை பகுதியை சேர்ந்த 43 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.