அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளது. தற்போது மாவட்டத்தின் நாவிதன்வெளி, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சவளக்கடை, மத்தியமுகாம், நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடைகள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த இரண்டு மூன்று தினங்களாக தொடர்சியாக மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் தொடர்சியாக மழை பெய்து வருவதால் நெல் அறுவடை செய்வதில் விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு போன்ற தாழ்நில வயல் நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் இம்முறை 93,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் தெரிவித்தார்.
விளைச்சல் மேற்கொண்ட காலப்பகுதியில் மழைவீழ்ச்சி குறைவாக இருந்தமை மற்றும் வேளாண்மை பூக்கும் பருவத்தில் தொடர்சியாக மழை பெய்தமை போன்ற காரணங்களால் இம்முறை விளைச்சலில் வீழ்ச்சி ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.