கட்டுநாயக்க விமான நிலையத்தில் 24 மணிநேரத்தில் 24 பயணிகள் விமான சேவைகள்

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் 24 பயணிகள் விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மூலமாக மொத்தம் 1,477 பயணிகள் தமக்கான சேவைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இக் காலக் கட்டத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய 10 விமானங்களின் மூலமாக 832 பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அவர்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் துபாய் ஆகியவற்றுக்கு வேலைக்காகச் சென்ற 389 இலங்கையர்கள் இலங்கை அரசாங்கத்தின் திருப்பி அனுப்பும் திட்டத்தின் கீழ் அழைத்து வரப்பட்டவர்கள் ஆவர்.

மேலும் துபாயிலிருந்து 97 பேரும், கட்டாரின் தோஹாவிலிருந்து 79 பேரும், சிங்கப்பூரிலிருந்து 45 பேரும் நாட்டை வந்தடைந்தவர்களில் அடங்குவர்.

நாட்டை வந்தடைந்த இவர்கள் அனைவரும் இலங்கை இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதேவேளை இக் காலக் கட்டத்தில் 14 விமானங்களின் மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 645 பயணிகள் நாட்டை விட்டு புறப்பட்டும் உள்ளனர்.