விட்டுக்கொடுப்பிற்கு தயாராகும் கூட்டமைப்பு!!

sumanthiran
sumanthiran

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை முன்னெடுக்க வேண்டும் என்ற பிரேரணை தொடர்பில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நல்லதொரு முடிவை எதிர்பார்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

பொறுப்புக்கூறல் விடயத்தில் புதிய அரசாங்கத்திற்கு எமது அழுத்தங்களை முழுமையாக நாம் பிரயோகிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை குறித்த விவகாரத்தில் எமக்கு அனுசரணையாக இருக்கின்ற நாடுகளின் கூட்டமொன்று உள்ளது. இந்த குழுவிற்கு இப்போது தலைமை தாங்குவது பிரித்தானியா, ஆகவே அவர்கள் தான் இப்போது இதற்கொரு வடிவம் கொடுக்க வேண்டும். சில நாட்களில் மேலும் சிலருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்போது எழுந்துள்ள புதிய சூழ்நிலை சம்பந்தமாக இப்போது பிரேரணையை நிறைவேற்றிய நாடுகளுடன் நாம் இப்போதே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். இது மார்ச் மாதத்தில் நல்லதொரு முடிவை கொண்டுவரும் என எதிர்பார்க்கிறோம்.

பொறுப்புக் கூறல் விடயத்தை தவிர்த்து செயற்பட முடியாது. பொறுப்புக்கூறல் என்பது எல்லா அரசாங்கங்களுக்கும் இருக்கின்ற பொறுப்பாகும். அதனை தட்டி கழிக்கவே முடியாது.

புதிய அரசாங்கம் வடக்கு, கிழக்கில் எமது மக்களை அடையாளப்படுத்தி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்தால் அதனை நாம் ஆதரிப்போம்.

அதற்கான பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் நாம் கண்ணை மூடி செயற்படுவதாக அர்த்தமில்லை. இந்த விடயத்தில் எமது எதிர்ப்பையும் அழுத்தங்களையும் முழுமையாக நாம் பிரயோகிப்போம் என்றார்.