கடந்த வாரம் இடம் பெற்ற நானாட்டன் பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உயர்மட்ட குழுவினரால் மாவட்ட ரீதியில் இடம் பெறும் மணல் அகழ்வுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதுடன் மணல் அகழ்வு மற்றும் அனுமதி தொடர்பான விடயங்களை ஒழுங்குபடுத்தியதன் பின்னர் கட்டாய தேவைகளுக்கான மணல் அகழ்வுகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டது.
குறித்த தீர்மானத்திற்கு அமைய மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர் மடு மாந்தை முசலி ஆகிய பிரதேச செயலகங்களுக்கான மணல் அகழ்வு அனுமதிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் நானாட்டன் பிரதேச செயலாளர் அனுமதியுடன் நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் மாத்திரம் தற்போது வரை மணல் அகழ்வு இடம் பெற்று வருவதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அதே நேரத்தில் பிரதேச செயலக ஒருங்கிணைப்பு கூட்டங்களில் பெரும்பாலும் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் வெறுமனே தீர்மானங்களாகவே எழுத்துக்களில் காணப்படுவதாகவும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும் பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த விடயங்களில் பொருத்தனான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்