சொகுசு காரில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினருக்கு விளக்கமறியல்!

7b84e7c49f0a4d8ae64e7597297a1725
7b84e7c49f0a4d8ae64e7597297a1725

சொகுசு காரில் சென்று போதைப்பொருள் விநியோகம் மற்றும் விற்பனையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் காவற்துறையினர் தெரிவித்தனர்.

தங்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய நேற்றுமுன்தினம் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் சொகுசுக் காரொன்றை வழிமறித்துச் சோதனையிட்டபோது அக்காரில் பயணம் செய்த இளம் தம்பதியினரிடமிருந்து ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஓட்டமாவடியைச் சேர்ந்த 31 வயதான கணவனிடமிருந்து 160 மில்லி கிராம்  மற்றும் 27 வயதான மனைவியிடமிருந்து 140  மில்லிகிராம் ஹெரோயினை தாம் கைப்பற்றியதாக காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

இந்தத் தம்பதியினர் மிகவும் சூட்சுமமான முறையில் பாரிய அளவில் போதைப் பொருள் விநியோகம் மற்றும் வியாபாரத்திலீடுபட்டு வருவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சந்தேக நபர்களின் நடமாட்டத்தை அவதானித்து வழிமறித்தாக காவற்துறையினர் தெரிவித்தனர். 

இதன்போது சந்தேக நபர்கள் பயணித்த சொகுசுக் காரும் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது அவர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.