மட்டக்களப்பு திருப்பெரும்துறை பிரதேசத்தில் வீதியில் நிறுத்திவைத்த மோட்டர்சைக்கிளை திருடிக்கோண்டு அதனைச் செலுத்திச் சென்ற இரு திருடர்கள் வீதிவிபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் அவர்களை இன்று புதன்கிழமை (03) கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீதி ஓரத்தில் உள்ள தனது வயலுக்கு டியோ ரக மோட்டார்சைக்கிளில் சம்பவதினமான நேற்று செவ்வாய்க்கிழமை (02) பிற்பகல் சென்ற நிலையில் மோட்டார்சைக்கிளை அதன் சாவியுடன் நிறுத்தி வைத்துவிட்டு வயலுக்குள் சென்று திரும்பி வரும்போது மோட்டார் சைக்கிள் திருட்டுப் போயுள்ளதையடுத்து காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் அதேபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த தனது நண்பனுடன் அந்தபகுதில் மது அருந்திவிட்டு இருவரும் நடந்து வீடு செல்ல முற்பட்டபோது நண்பன் தன்னை வீட்டில் விடுமாறு கோரிய நிலையில் வீதியில் வரும் போது மோட்டார் சைக்கில் ஒன்று சாவியுடன் யாரும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைக் கண்டனர்.
இதனையடுத்து அதனை திருட்டுத்தனமாக எடுத்து செலுத்திக்கோண்டு சத்துருக்கொண்டான் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பிவிட்டு இருவரும் ஏறாவூரை நோக்கி பிரயாணித்தனர் இதன்போது ஏறாவூர் மயிலம்பாவெளி பிரதேசத்தில் மோட்டர்சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதையடுத்து இருவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் பிரயாணித்த மோட்டார் சைக்கிள் திருடியதாக கண்டுபிடித்ததையடுத்து இருவருக்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இருவரையும் வைத்தியசாலையில் நீதவான் சென்று பார்வையிட்டு இருவரையும் 14 விளக்கமறியலில் வைக்குமாறும் சிறைச்சாலை அதிகாரிகளிடம் இவர்களை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.