இரணைதீவில் உடலங்களை புதைக்கக்கூடாது என்று ஜனாதிபதியிடம் வலியுறுத்திய டக்ளஸ்

download 1 4
download 1 4

இரணைதீவில் முஸ்லிம் மக்களின் உடலங்களை புதைப்பது தொடர்பாக வரும் திங்கட்கிழமைக்குள் முடிவு கிடைக்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்ட நிறைவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இது குறித்து பிரதமர், ஜனாதிபதியுடன் கதைத்திருக்கின்றேன். சுகாதார அமைச்சரும் நான் பிரதமர், ஜனாதிபதி ஆகியோருடன் கதைத்தது தொடர்பாக என்னிடம் தொலைபேசியில் கலந்துரையாடினார்.

இதன்போது அந்த இடம் புதைப்பதற்கு பொருத்தமானதாக இல்லை என்ற முடிவை அவரிடம் கூறினேன்.

அங்கு இலங்கைக்கு வருவாய் கிடைக்க கூடிய வகையில், ஒரு வருடத்திற்கு 26 மில்லியன் அமெரிக்க டொலர் வருடாந்த வருமானத்திற்கான ஒரு திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம்.

அதைவிட இன்னும் பல திட்டங்கள் அங்கு செய்யப்பட இருக்கின்றன. ஆகையினால் இத்திட்டத்தை மாற்றியமைக்குமாறும், வேறு சில தீவுகளை இதற்காக அடையாளப்படுத்தியும் இருக்கின்றேன்.

இதற்கான தீர்வு இன்றோ நாளையோ அல்லது வருகின்ற திங்கட்கிழமையோ அமைச்சரவையிலிருந்து கிடைக்கும் என்றார்.