மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்; பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராய்வு

DSC 0099
DSC 0099

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று காலை(4) 10 மணியளவில் வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேலின் நெறிப்படுத்துதலில் இடம் பெற்ற குறித்த ஒருங்கிணைப்புக்கு கூட்டத்தில் இணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,கே.திலீபன், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் பிரதேசச் செயலாளர்கள், அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள், காவல்துறையினர், இராணுவம், கடற்படை உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு,மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

குறிப்பாக குடி நீர்,விவசாயம், கடற்தொழில், கல்வி,சுகாதாரம்,வீதி அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி உற்பட பல்வேறு விடையங்கள் தொடர்பான ஆராயப்பட்டது.

மேலும் மன்னார் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ சோதனை சாவடியினால் மக்கள் குறிப்பாக அரச பணியாளர்கள் பல்வேறு அசெகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

சோதனைச்சாவடிகள் உள்ளமை தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை. ஆனால் குறித்த சோதனைச் சாவடி அமைந்துள்ள பகுதியே ஒரு பிரச்சினையாக உள்ளது.

மக்களின் பொழுது போக்கு இடமாக காணப்பட்ட குறித்த இடத்தில் இராணுவ சோதனைச் சாவடி அமைந்துள்ளது.
இதானால் மக்கள் அவ்விடத்திற்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டுள்ளது.

மேலும் அரச கடமைகளுக்காக செல்லும் பணியாளர்கள் குறித்த சோதனைச்சாவடியில் நிறுத்தப்படுகின்றனர்.அவர்களின் மோட்டார் சைக்கில் கலற்றப்பட்டு சோதனைக்கு உற்படுத்தப்படுகின்றது.இதனால் அவர்கள் உரிய நேரத்திற்கு கடமைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விடையம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்.இதே வேளை மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.எம்.முஜாகிர் கருத்து தெரிவித்தார்.

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தினூடாக ஒரு பிரதேச சபை எல்லைக்குற்பட்ட பகுதிகளில் நடைபெறுகின்ற அனைத்து அபிவிருத்திச் செயற்பாடுகளும் அப்பிரதேச சபையின் அனுமதியுடனேயே நடைபெற வேண்டும்.

எனினும் எமது மன்னார் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடை பெறுகின்ற சில அபிவிருத்தி செயற்பாடுகள் எமது அனுமதியின்றியும், எமது கவனத்திற்கு கொண்டு வராமலும் இடம்பெறுகின்றது.என குற்றச்சாட்டுக்களை முன் வைத்து இனி வரும் காலங்களில் மன்னார் பிரதேச சபையின் அனுமதியை பெற்று உரிய முறையில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.என அவர் தெரிவித்தார்.