சௌபாக்கியா உற்பத்திக் கிராமம் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் ஆரம்பித்து வைப்பு!

FB IMG 1614960107947
FB IMG 1614960107947

அதிமேதகு ஜனதிபதி அவர்களின் வழிகாட்டலுக்கமைய சமுர்த்தி, வதிவிட பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சௌபாக்கியா உற்பத்திக் கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(05) காலை 10.00மணிக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் குமாரபுரம் கிராம சேவகர் பிரிவின் குமாரபுரம் கிராம மக்கள் சங்க பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

பிரதேச செயலாளர் ம.உமாமகள் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கே.காதர் மஸ்தான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த நிகழ்ச்சித்திட்டத்தினை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது குறித்த நிகழ்சித்திட்டத்தின் பெயர்ப்பலகை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிராம சங்கத்தின் சிறு அரைக்கும் ஆலையும் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டதுடன் சிறுதொழில் முயற்சியாளர்களின் விற்பனைக் கண்காட்சியினையும் அதிதிகள் பார்வையிட்டனர். இதன்போது அவர்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கேட்டறிந்து கொண்டார்.

மாவட்டத்தில் இவ் வேலைத்திட்டத்தின் கீழ் ஐந்து கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுபீட்சமான தொலைநோக்கினைக் கொண்ட யதார்த்தமான சகல பிரஜைகளுக்கும் திட்டவட்டமான ஸ்திரத்தன்மை வளர்ச்சி கொண்ட நாட்டினை உருவாக்கும் சௌபாக்கியா உற்பத்திக் கிராம நிகழ்ச்சித்திட்டமூடாக உற்பத்திகளை ஊக்குவித்தல், தேசிய உற்பத்தியினை அதிகரித்தல், கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்தி மாற்று வருமான வழிகளினை ஏற்படுத்தல், சிறிய மற்றும் நடுத்தர மேம்பாட்டினூடாக வேலையின்மையை குறைத்தல், உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவித்தல் போன்றதான நோக்கங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்திப் பணிப்பாளர், விவசாயப்பணிப்பாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர், தொழிற்துறை திணைக்கள மாவட்ட இணைப்பாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பல தரப்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.