வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களால், முன்னெடுக்கப்படும் வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் நாற்பத்திரண்டாம் கட்டமானது நேற்றும் இன்றுமாக (2021.03.07,2021.03.08) முறிப்பு, திம்பிலி பகுதிகளில் இடம்பெற்றது.
இச்செயற்றிட்டத்தின் நாற்பத்து இரண்டாங்கட்டத்தில் தாயகத்தைச்சேர்ந்த அறுபத்தொரு குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்.
வாழ்வோம் வளம்பெறுவோம் என்ற செயற்றிட்டமானது குறுங்கால வாழ்வுடமை ஊக்குவிப்பு நோக்கில் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
குறித்த செயற்றிட்டமானது ரவிகரன் அவர்களால் கடந்த 2014.05.17 அன்று, முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது.
அந்தவகையில் நடைபெற்று முடிந்த நாற்பத்து இரண்டாங்கட்டத்துடன் இது வரையில் 2374 குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டிருப்பதாக துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இக்கட்டத்திற்கான பங்களிப்பினை புலம்பெயர்ந்து பிரான்சில் வாழும் திரு. கிருஸ்ணபிள்ளை ரவீந்திரன் அவர்கள் தனது சகோதரரான திரு. கிருஸ்ணபிள்ளை ஆனந்தன் அவர்களின் 60 ஆவது அகவைநிறைவை முன்னிட்டு வழங்கியுள்ளார்.
மேலும் இந்நிகழ்வில் கரைதுறைப்பற்றுப்பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.