வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவர்கள் உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

202006220903239157 Integrated In Vellore and Thiruvannamalai districts Corona SECVPF 1
202006220903239157 Integrated In Vellore and Thiruvannamalai districts Corona SECVPF 1

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் உட்பட 8 பேருக்கு இன்று (11) இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் சிலர் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (11) இரவு வெளியாகிய நிலையில் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றுபவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி வவுனியாவில் இன்று 08 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வவுனியா கண்டி வீதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையை சேர்ந்த 14 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.