தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்று சந்திக்கிறார் இந்திய உயர்ஸ்தானிகர் !

Untitled 1dffrr
Untitled 1dffrr

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று சனிக்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. அத்தோடு உயர்ஸ்தானிகர் நாளை ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பிற்கும் விஜயம் செய்யவுள்ளார்.

வட, கிழக்கிற்கான விஜயத்தின் போது நேற்று முன்தினம் சிவராத்திரி தினத்தன்று உயர்ஸ்தானிகர் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் சிவராத்திரி பூஜைகளில் கலந்து கொண்டதோடு , இந்திய அரசாங்கத்தினால் 326 மில்லியன் ரூபா செலவில் அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் புனர்நிர்மாணப் பணிகளையும் பார்வையிட்டார்.

அத்தோடு இந்தியாவின் 300 மில்லியன் ரூபா நிதியுதவியில் மன்னார் புனித மடு மாதா ஆலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள யாத்திரிகர்களுக்கான 144 இடைத்தங்கல் வீட்டு அலகுகளுக்கான அடிக்கல் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன் இணைந்து  உயர்ஸ்தானிகரால் நாட்டப்பட்டது. 

இந்நிகழ்வில் மன்னார் ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், குலசிங்கம் திலீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் மாகாணத்தின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளை உயர்ஸ்தானிகர் வியாழனன்று சந்தித்து கலந்துரையாடினார். 

இதன் போது கல்வி, ஆளுமை விருத்தி, சுகாதாரம், விவசாயம், நீர் மற்றும் மீன்பிடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகவும் ஆழமான ஈடுபாடு குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

மேலும் யாழ்ப்பாணத்துக்கான இந்திய கொன்சூலர் ஜெனரல் எஸ்.பாலச்சந்திரனுடனான சந்திப்பிலும் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கலந்து கொண்டார். 

இதன் போது அரசியல், பொருளாதாரம், கல்வி, சமூகம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட துறைகளைச்சேர்ந்த முன்னணி பிரமுகர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

இந்தியாவினால் வழங்கப்படும் உதவிகள் மற்றும் அதிகளவான முதலீடுகள் போன்றவற்றினூடாக வடமாகாணத்தின் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு தொடர்பாக இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

வாழ்வாதாரம், சுகாதாரம், கல்வி, கைத்தொழில் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொண்டிருந்தமைக்கான வரலாற்றினை இந்திய அரசாங்கம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்