பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, ஆடைகள் மற்றும் பொருட்களைக் கொள்வனவு செய்பவர்கள், சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் என காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை. எனவே, பண்டிகையை முன்னிட்டு, ஆடைகள் மற்றும் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக, வர்த்தக நிலையங்களுக்கும், அங்காடிகளுக்கும் செல்பவர்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
அத்துடன், பல்வேறு வர்த்தக நிலையங்களையும், கடைகளையும் நடத்துபவர்கள், குறித்த இடங்களை சுகாதார வழிமுறைகளுக்கு அமைய பேண வேண்டும்.
குறிப்பாக, பொதுமக்கள் கைகளைக் கழுவுவதற்கும், அவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிப்பதற்குமான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன், பணம் செலுத்தும் கரும பீடங்களுக்கு அருகில், சமூக இடைவெளியைப் பேணும் வகையிலான அடையாளங்கள் இடப்பட்டிருக்க வேண்டும் என்றும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.