வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
மானிப்பாயைச் சேர்ந்த தாயும் மகளும் உட்பட யாழ்ப்பாணத்தில் 6 கொரோனா நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
“யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 304 பேரின் மாதிரிகள் பி சி ஆர் பரிசோதனைக்கு முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 427 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதில் 9 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 6 பேரும் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் தலா ஒருவரும் கண்டறியப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் கொரோனா தோற்று அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட மானிப்பாயைச் சேர்ந்த தாயும் மகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாண மாநகர நவீன சந்தை வியாபார நிலையம் ஒன்றில் பணியாற்றும் 21 வயது இளைஞன் ஒருவர் தொற்று அறிகுறிகளுடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நிலையில் கொரோனா நோய்த்தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வசிக்கும் 15 வயதுச் சிறுமிக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் பயிலும் மாணவர்கள் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலை பெண் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட மல்லாவி மரக்கறி சந்தையில் சிலரிடம் முன்னெடுக்கப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் பெண் வியாபாரி ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பரந்தனைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.