இந்தியா வலியுறுத்தியுள்ளதால் மாகாணசபை தேர்தலை நடத்துவார்கள்

anura
anura

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவார் என்று எதிர்பார்க்கின்றோம்.

இந்தியா இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளமையினால் ஜனாதிபதி அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுப்பார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பிற்கான ஜே.வி.பி.யின் பரிந்துரைகளை கையளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தினூடாக மாத்திரம் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று கூற முடியாது.

எனினும், இலங்கையில் ஜனநாயகம், மனித உரிமைகள் என்பனவற்றை மேலும் வலுப்படுத்த அரசியலமைப்பு அத்தியாவசியமானதாகும். அதற்கமையவே நாம் புதிய அரசியலமைப்பிற்கான பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.

இலங்கையில் நீண்ட காலம் நிறைவேற்றதிகார ஆட்சி முறைமை காணப்பட்டபோதிலும் அது தோல்வியடைந்துள்ளது.

எனவே, நாடாளுமன்றத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி முறைமையையே நாம் வலியுறுத்துகின்றோம்.

நிறைவேற்றதிகார முறைமை நீக்கப்படும் பட்சத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிகளைக் கொண்ட நாடாளுமன்றத்தினை உள்ளடக்கும் வகையிலான தேர்தல் முறைமை உருவாக்கப்பட வேண்டும் என்பதை எமது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளோம்.

அத்தோடு வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடும்போது அது எவ்வகையான ஒப்பந்தமாக காணப்பட்டாலும், நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும்.

இதேவேளை இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளோம். இந்த இரட்டை குடியுரிமை விவகாரம் 19 ஆம் அரசியலமைப்பில் நீக்கப்பட்டு 20 ஆவது அரசியலமைப்பில் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே, தேர்தலில் போட்டியிடுபவர்கள் மாத்திரமின்றி அரசின் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படும் எவரும் இரட்டை குடியுரிமையைக் கொண்டவர்களாக இருக்கக் கூடாது என்பதை புதிய அரசியமைப்பிற்காக பரிந்துரைத்துள்ளோம்.

மேலும் நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி திறைசேரியிலிருந்து எதற்காகவும் நிதி செலவிடப்படக் கூடாது என்பதையும் குறிப்பிட்டுள்ளோம்.

அரச சொத்துக்கள் மற்றும் அரச நிதியை உபயோகிக்கும் எந்தவொரு நிறுவனமும் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புகூற வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.

இதைப்போன்று அடிப்படை உரிமைகள் தொடர்பான பல விடயங்களையும் எமது பரிந்துரைகளில் உள்ளடக்கியுள்ளோம்.

இந்தியா கூறியுள்ளதால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவார்.

தற்போது மக்களின் பெருமளவான தேவைகள் ஜெனீவாவில் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அல்லது இந்திய பிரதமரால் தெரிவிக்கப்பட்டால் மாத்திரமே பூர்த்தி செய்யப்படுகின்றன. அவ்வாறான நிலைமையே தற்போது நாட்டில் உருவாகியுள்ளது என்றார்.