ஏற்றம் அறக்கட்டளையின் எங்களால் எங்களுக்கு எனும் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு- பங்குடாவெளி பகுதியில் 5 பயனாளிகளுக்கு வாழ்வாதாரம் வழங்கப்பட்டது. 28.03.2021 அன்று பங்குடாவெளி பகுதியில் ஏற்றம் அறக்கட்டளையின் பணிப்பாளர் தனபாலசிங்கம் சுதாகரன் தலைமையில் குறித்த 5 பயனாளிகளுக்கு வாழ்வாதாரமானது வழங்கிவைக்கப்பட்டது .
அதாவது எமது விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்தவர்களின் மனைவிமார்களும் கடந்த காலத்தில் போராட்டத்தில் இணைந்து கொண்டவர்களுக்குமான உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
வாழைச்சேனையில் வசித்துவரும் விநாயகமூர்த்தி சந்திரமேகன் என்பவருக்கு 1.5 இலட்சம் ரூபா பணமும் ,பெண் தலைமைத்துவக் குடும்பமான துர்ஸ்சினி என்பவருக்கு நாட்டுக் கோழி வளர்ப்புக்காக 1 இலட்சம் ரூபா பணமும், களுவன்கேணியை சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கு 1 இலட்சம் ரூபா பெறுமதியான துணிவகைகளும், பெண் தலைமைத்துவக் குடும்பமான வந்தாரமூலையைச் சேர்ந்த புண்ணியக்குமார் நிர்மலா என்பவருக்கு 1 இலட்சம் ரூபா நிதியும் தையல் இயந்திரம் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது. இறுதியாக பீதாம்பரம் புவனேஸ்வரி என்பவருக்கு அவரது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக 1 இலட்சம் ரூபா நிதி வழங்கிவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஏற்றம் அறக்கட்டளையின் பணிப்பாளர் தனபாலசிங்கம் சுதாகரன் உரையாற்றுகையில்,
எமது விடுதலைக்காக தமது உயிரை தியாகம் செய்தவர்களின் மனைவிமார்களுக்கும் கடந்த காலத்தில் போராட்டத்தில் இணைந்து கொண்டவர்களுக்குமான உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டார். மேலும் உரையாற்றுகையில், எமது மண்ணுக்கு போராட்டத்தில் இணைந்தவர்களுடைய தந்தை, கணவர் 24 மணிநேரமும் தமிழர்களின் நலனை சிந்தித்து உயிர் தியாகம் செய்துள்ளனர். உயிர்தியாகத்தை விட பெரிய வேறெந்த தியாகமும் இல்லை ஆகவே அவர்கள் மனைவி, பிள்ளைகளை நல்லவழிக்கு கொண்டு செல்லவேண்டியது எமது கடமையாகும் .
நாம் இன்று புலம் பெயர் தேசத்தில் இருக்கின்றோம் என்றால் புலம் பெயர் தேசத்தில் இருக்கும் எங்கள் முதற்கடமை என்பது எமது நாட்டுக்காக போராடியவர்களின் குடும்பங்களை நட்டாற்றில் விடாமல் அவர்களுக்கான நிரந்தர வாழ்வாதாரத்தை வழங்கி முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். இன்னும் பலபேர் இரண்டு மூன்று பிள்ளைகளுடன் இருக்கின்றனர். அவர்களின் பிள்ளைகளின் கல்விக்கான உதவியை செய்து அப் பிள்ளைகளை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.