ஒரு கிலோ கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் விளக்கமறியலில்!

42f98f1d af3e 4981 9f41 02a3108be5b3
42f98f1d af3e 4981 9f41 02a3108be5b3

சுமார் ஒரு கோடி பெறுமதியான ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரை வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், மற்றைய சந்தேக நபரை பிணையில் விடுவித்தது.

வட்டுக்கோட்டை மாவடியில் வீடொன்றில் போதைப்பொருள் பொதி ஒன்று உள்ளதாக சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்துக்கு தகவல் கிடைத்தது.

மதுவரித் திணைக்களத்தின் சாவகச்சேரி நிலையப் பொறுப்பதிகாரி அசோகரட்ணத்தின் அறிவுறுத்தலில் மதுவரிப் பரிசோதகர் வசீகரனின் தலைமையில் மல்லாகம் மற்றும் பருத்தித்துறை மதுவரி நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அந்த வீடு நேற்று மாலை சுற்றிவளைக்கப்பட்டது.

வீட்டு உரிமையாளர் மாறுபட்ட தகவல்களை வழங்கிய நிலையில் வீடு சோதனையிடப்பட்டு பொதி மீட்க்கப்பட்டது. அதில் உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் ஒரு கிலோ கிராம் காணப்பட்டது. அதன் பெறுமதி சுமார் ஒரு கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதனையடுத்து அந்த வீட்டின் உரிமையாளரான 50 வயதுடைய ஒருவரும் அங்கு வந்திருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

தனது வீட்டில் வந்திருந்தவருக்கும் அந்தப் பொதிக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். அதனால் அவர் விடுவிக்கப்பட்டார்.

ஹெரோயினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளர் வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். ஹெரோயின் பொதி சான்றுப்பொருளாக நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டது.