தலைநகரில் 15 ஆயிரம் புனித குர் ஆன் புத்தகங்கள்; சீல் வைத்த அதிகாரிகள்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 2
625.500.560.350.160.300.053.800.900.160.90 2

கொழும்பு வெள்ளவத்தை காவற்துறை அதிகார எல்லைக்கு உட்பட்ட சர்வதேச பாடசாலை ஒன்றின் களஞ்சிய அறைக்கு காவற்துறையினர் சீல் வைத்துள்ளனர்.

வெள்ளவத்தை காவற்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைவாக, தர்மாராம வீதியில் அமைந்துள்ள குறித்த சர்வதேச பாடசாலைக்கு காவற்துறையினர் சென்று சோதனை செய்த போது, அங்கு ஓர் அறையில் 15,000 ஆயிரம் வரையில் புனித அல் குர் ஆன் பிரதிகள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் அது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ள வெள்ளவத்தை காவற்துறையினர் அதிலிருந்து சில பிரதிகளை பொறுப்பில் எடுத்துள்ளதுடன், குறித்த களஞ்சிய அறைக்கு சீல் வைத்துள்ளனர்.

குறித்த புனித அல் குர் ஆன் அல்லது புத்தகங்கள் சட்ட ரீதியிலானவையா அல்லது சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டவையா என்பதை உறுதி செய்துகொள்ள விஷேட விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக வெள்ளவத்தை காவல்நிலைய பொறுப்பதிகாரி கூறினார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப்காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் கொழும்பு பிரதிப் காவற்துறை மா அதிபர் எச்.என்.கே.டி. விஜயசிறி ஆகியோரின் மேற்பார்வையில் சிறப்புக் குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த குர் ஆன் பிரதிகள், ஆங்கில மற்றும் சிங்கள மொழி பெயர்புகள் என கூறப்படும் நிலையில், அவை இஸ்லாமிய கற்கைகளுக்கான நிறுவனத்துக்கு சொந்தமானவை என தெரியவந்துள்ளது.

அரபு மொழியற்ற, தனி ஆங்கில, சிங்கள மொழியிலான குர் ஆன் மொழி பெயர்ப்புகளான குறித்த 15 ஆயிரம் பிரதிகளும், வெளிநாடொன்றில் அச்சிடப்பட்டு அண்மையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அவை குறித்த சர்வதேச பாடசாலையுடன் இணைந்த கட்டிட அறையொன்றில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அறிய முடிகின்றது.

இவ்வாறான நிலையிலேயே அவற்றை விநியோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் போது காவற்துறையினருக்கு கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய, அங்கு செனற காவற்துறையினர் குறித்த அறைக்கு சீல் வைத்துள்ளனர்.

அத்துடன் சில பிரதிகளை பொறுப்பேற்று அதன் உள்ளடக்கங்களையும், சட்ட த் தன்மையையும் ஆராய காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.