கிளிநொச்சி மாவட்டத்தில் ஈஸ்டர் வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன. அனைத்து தேவாலயங்களிலும் ஈஸ்டர் விசேட வழிபாடுகள் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேவேளை தேவாலயங்களிற்கு இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கியிருந்ததுடன், சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
அதிகாலை முதல் நண்பகல் வரை வெவ்வேறு நேர அட்டவணைகளிற்கு அமைவாக வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சனத்தொகை கூடிய தேவாலயங்களில் இவ்வாறு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரதான திருச்சபைகள் மற்றும் சுயாதீன திருச்சபைகள் என அனைத்து தேவாலயங்களிலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்றது. நாட்டில் தற்போது உள்ள கொவிட் அச்சுறுத்தல், மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து மக்கள் விசேட பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.
இதேவேளை கிளிநொச்சி அங்கிலிக்கன் திருச்சபையிலும் விசேட வழிபாடு இடம்பெற்றது. அருட்தந்தை டானியல் தலைமையில் இடம்பெற்ற குறித்த வழிபாட்டில் மக்கள் கலந்துகொண்டு திருப்பலியிலும் பங்கெடுத்தனர்.
அதேபோன்று கிளிநொச்சி ஜெபாலயத்திலும் விசேட வழிபாடு இடம்பெற்றது. இதன்போது மக்கள் உயிர்த்த இயேசுவை மகிழ்ச்சியுடன் பாடல் பாடி ஈஸ்டர் வழிபாட்டில் ஈடுபட்டனர். அதேவேளை சிறுவர்களும் உயிர்த்த ஞாயிறு கொண்டாட்டங்களிலும், வழிபாட்டிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து தேவாலயங்களிலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.