மதுபோதையில் வந்தவரை கொலை செய்த இரு பெண்கள் கைது !

1460349783 1083 min e1594572217483 680x365 c
1460349783 1083 min e1594572217483 680x365 c

முந்தல் பாலச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்று தொடர்பில், கொலையுண்ட நபரின் மனைவி எனக்கூறப்படும் பெண்ணும், அப்பெண்ணின் சகோதரனின் மனைவியும் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சந்தேகநபர்களால் 37 வயதான நபரொருவர் அடித்துக் கொல்லப்பட்டதன் பின்னர் அவரை தூக்கில் தொங்கவிட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்த நபர் அப்பகுதியிலுள்ள தும்பு ஆலையொன்றில் பணியாற்றிவந்த ஒருவரென தெரியவந்துள்ளது.

கொலையுண்ட நபர், சந்தேகநபரான பெண்ணின் மூன்றாவது கணவர் எனவும், அவர்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்திருக்கவில்லை என்ற தகவல்கள் விசாரணைகளில் வெளிவந்துள்ளன.

இந்தப் பெண் மற்றும் உயிரிழந்த நபர் ஆகியோர் குறித்த தும்பு ஆலை வளாகத்திலேயே வசித்து வந்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அவர்கள் இருவருக்கிடையில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருக்கவில்லை என்றும் சந்தேகநபர்களின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மேற்படி நபர், சம்பவ தினத்தன்று மதுபோதையில் வந்து சந்தேகநபர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளதாகவும் அதன்போது இடம்பெற்ற தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார் என்றும் காவல்துறை விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்பின்னர் அவர்கள் அந்நபரின் சடலத்தை தூக்கில் தொங்கவிட்டு, இந்த மரணத்தை தற்கொலையாகக் காட்டுவதற்கு முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் முந்தல் காவல்நிலையத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.