மட்டக்களப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம்

vettayan film
vettayan film

மட்டக்களப்பில் வெளியாகவுள்ள வேட்டையன் என்னும் முழு நீளத்திரைப்படத்திற்கு மக்கள் தமது ஆதரவினை வழங்க வேண்டுமென இயக்குநர் நா.விஸ்ணுஜன் கோரியுள்ளார்.

இது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம் மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த இளம் கலைஞர்களின் முயற்சியினால் நோர்வேயினை சேர்ந்த பரணிதரன் என்பவரின் தயாரிப்பில் வேட்டையன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்தின் நடிகர், நடிகைகள் அனைவரும் மட்டக்களப்பினை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள்ளேயே செய்யப்பட்டுள்ளது. அத்துடன் படப்பிடிப்பின் தொழில்நுட்பம், இசையமைப்பு உட்பட அனைத்து செயற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள்ளேயே செய்யப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தினை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 10.30க்கு கல்லடி சாந்தி திரையரங்கில் வெளியிடவுள்ளோம்.

இந்த திரைப்படம் நோர்வேயில் திரையிடப்படவுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் ஆதரவு வழங்கினால் ஏனைய நாடுகளிலும் இதனை திரையிடுவதற்கான அனுமதிகள் வழங்கப்படும்.

வேட்டையன் திரைப்படத்திற்கு வடகிழக்கு உட்பட புலம்பெயர் தமிழர்கள் தமது ஆதரவினை வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த திரைப்படத்தின் மூலம் கிடைக்கும் பணம், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வறிய நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பயன்படுத்தவுள்ளதாகவும் இதன் போது தெரிவித்திருந்தார்.