யாழ்ப்பாண மாவட்டத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் ஈபிடிபியினர் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு தொடர் தோல்விகளைப் பரிசளித்துவருகின்றனர்.
ஆட்சி மாற்றத்தின் பின்பு இருக்கும் அரசியல் சூழ்நிலையில், கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாண மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தை ஈபிடிபி மற்றும் அகில இலங்கைக் காங்கிரஸ் தரப்பினர் இணைந்து தோற்கடித்தனர். யாழ்ப்பாண நகரசபையைத் தொடர்ந்து பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரியிலும் இந்த அபூர்வ கூட்டணி இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டங்களைத் தோற்கடித்துள்ளனர்.
கடந்த காலங்களில் வவுனியா நகரசபையில் ஈபிஆர்எல்எவ் வேட்பாளருக்கு பெரும்பான்மை கட்சி உறுப்பினர்கள் ஆதரவளித்தார்கள் என்பதற்காக ஈபிஆர்எல்எவை துரோகிகள் என்று தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிழக்கு மாகாணத்தில் தனது கட்சியின் உறுப்பினர்கள் பெரும்பான்மைக் கட்சிகளுக்கு ஆதரவளித்தபோது அமைதிகாத்தார்.
அது மட்டுமல்லாமல் ஈபிடிபியின் துணையுடன் பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி நகரசபையின் தவிசாளர் பதவிகளைப் கூட்டமைப்பினர் பெற்றார்கள் என்று குற்றம்சாட்டிய கஜேந்திரகுமார் அணியினர் இன்று அதே ஈபிடிபியினருடனும் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன பெரமுனவினருடனும் இணைந்து கூட்டமைப்பைத் தோற்கடித்துள்ளனர்.