புதுவருடத்தை முன்னிட்டு இலங்கை வந்த இந்தியாவின் கப்பல்

indian ship
indian ship

ஐந்தாவது ராஜ்புத் வகை நாசகாரி ஐ.என்.எஸ்.ரன்விஜய் கப்பல் கடந்த திங்கட்கிழமை கொழும்புக்கான நல்லெண்ணவிஜயம் ஒன்றைமேற்கொண்டு வந்துள்ளது.

இலங்கை – இந்தியா ஆகிய நட்புநாடுகள் மத்தியில் கடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பினைவிருத்தி செய்யும் செயற்பாடுகளில் மற்றொரு படியாக இந்த கப்பலின் விஜயம் அமைகின்றது என்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளதாவது ;

புதுவருட கொண்டாட்டங்கள் நடைபெறும்தருணத்தில் இலங்கை மக்களுக்கான பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கான வாழ்த்துக்களுடன் கூட்டொருமைப்பாடு மற்றும் ஐக்கியம் ஆகிய செய்தியினையும் குறித்து நிற்பதாக குறித்த இந்திய கடற்படைக் கப்பலின் வருகைஅமைகின்றது.

இக்கப்பல் கப்டன் நாராயணன் ஹரிஹரனின் கட்டளையின் கீழியங்குவதுடன் மேற்கு கடற்பிராந்திய கட்டளை தளபதி சுதர்ஷனவையும், கப்டன் நாராயணன் சந்திக்கவுள்ளார்.

அத்துடன் நாளை வியாழக்கிழமை இந்திய அமைதிப்படையினரின் நினைவுத்தூபியில் அவர் அஞ்சலி செலுத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளில் இலங்கையும் இந்தியாவும் மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பினை பாரம்பரிய ரீதியாக பகிர்ந்துவருகின்றன.

பயிற்சி மற்றும் ஆளுமை விருத்தி செயற்பாடுகளில் பரஸ்பரம் நன்மைதரும் வகையில் இரு கடற்படையினரும் ஒத்துழைப்பினை வழங்கி செயற்பட்டு வருகின்றனர்.

மிகவும் நெருங்கிய நட்புநாடுகள் மத்தியில் கடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பினைவிருத்தி செய்யும் செயற்பாடுகளில் மற்றொரு படியாக இந்த கப்பலின் விஜயம் அமைகின்றது.

நீர் மூழ்கி எதிர்ப்பு வசதியினைக் கொண்டிருக்கும் இந்த ஏவுகணை எதிர்ப்புகப்பலானது சுதேசிய முறையில் சுயமாக தயாரிக்கப்பட்ட பிரமோஸ் சுப்பர் சொனிக் ஏவுகணை வசதிகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.