நாட்டில் உள்ள சகல பாடசாலைகளும் இரண்டாம் தவணைக் கற்றல் செயற்பாடுகளுக்காக நாளை திறக்கப்படவுள்ளன.
கடந்த 9ஆம் திகதி முதலாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில், நாளைய தினம் முதல் இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி மேல் மாகாண பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதற்கான சுகாதார வழிகாட்டியானது கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.
அந்த சுகாதார வழிகாட்டியின் அடிப்படையிலேயே நாளைய தினம் சகல பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளின் தொற்று நீக்கும் நடவடிக்கைகளை அந்தந்த பாடசாலைகளின் அதிபர்கள் குறித்த பிரதேச பொதுசுகாதார பரிசோதகரை தொடர்புகொண்டு மேற்கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா குறிப்பிட்டுள்ளார்.