வெள்ளை வேன் கடத்தல்- வாயைத் திறந்த ராஜித!!

5 t
5 t

வெள்ளைவேன் கடத்தல்கள் குறித்து தகவல்களை வெளிப்படுத்தியவர்களிடத்தில் பக்கச்சார்பான விசாரணைகள் நடத்தப்பட்டு முழமையான விடயங்கள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.


அத்துடன் புதிய ஆட்சியாளர்கள் வெள்ளை வேன் விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கும் விசாரணைகள் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.


ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கு சொற்ப நாட்களுக்கு முன்னதாக இடம்பெற்ற ராஜித சேனாரத்ன நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெள்ளைவான் கடத்தல்கள் மற்றும் மனிதப்படுகொலைகள் இடம்பெற்று முதலைகளுக்கு போடப்பட்டமை தொடர்பில் தகவல்களை வெள்ளை வேனில் சாரதியாக பணியாற்றியதாக கூறி தன்மை அடையாளப்படுத்திய இருவர் வெளியிட்டிருந்தனர். 


இந்நிலையில் குறித்த இருவரையும் கைது செய்து குற்றப்புலனாய்வுப்பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றர். அவர்களின் கைது தொடர்பில் கருத்து வெளியிட்ட ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், அவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 
2015ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்தில் ஜனநாயகம் மறுதலிக்கப்பட்ட ஆட்சிக்காலத்தில் வெள்ளை வேன் கலாசாரம் அறிமுகமானது.


இந்தக்கலாசாரம் நடைமுறையில் இருந்த காலத்தில் பலர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடுகள் உள்ளன.

அவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டபோதும் அவை முற்றுப்பெற்றிருக்கவில்லை. மேலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் பலரும் என்னிடத்தில் நேரடியாகவும் முறைப்பாடுகளை தெரிவித்திருந்தனர்.


இந் நிலையில் தான் குறித்த இருநபர்களும் வெள்ளை வேன் கடத்தல்கள் தொடர்பிலான விடங்களை பகிரங்கப்படுத்துவதற்கு முன்வந்திருந்தனர். குறித்த நபர்களிடத்தில் நான் அதற்கான சாட்சிகள் இருக்கின்றவா என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கேட்டிருந்தேன்.


அந்த இரண்டு நபர்களும் நேரடியாக சட்சியத்தினைக் கொண்டிருப்பதாகவும் மற்றும் சில ஆவணங்களையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் தான் வெள்ளை வேன் கடத்தல்கள் குறித்த தகவல்களை அவர்கள் மூலமாக நான் பங்கேற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக வெளிப்படுத்தியிருந்தேன்.


மேலும் அவர்கள் தமக்கான பாதுகாப்பினை வழங்குமாறும் கோரியிருந்தார்கள்.

இந்நிலையில் குறித்த விடயம் சம்பந்தமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாரிடத்தில் நானே கோரியதோடு உரியவர்களுக்கு பாதுகாப்பினை வழங்குமாறும் கோரியிருந்தேன்.


தற்போது அவர்கள் இருவரையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

அவர்களிடத்தில் உரிய விசாரணைகள் பக்கச்சார்பின்றி முன்னெடுக்க வேண்டும்.

அவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அனைத்து விடயங்களும் பகிரங்கப்படுத்தப்படுவது அவசியம் என்பதோடு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நான் தயாராகவும் இருக்கின்றேன் என்றார்.