துறைமுக நகர சட்ட மூலம் பாரதூரமானது : சிக்கலை தீர்க்க அரசாங்கத்திற்கு ரணிலின் ஆலோசனை!

Ranil 800x466 1
Ranil 800x466 1

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் முத்துறை அதிகாரங்களையும்,  சுயாதீனத்தன்மையினையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இது மிகவும் பாரதூரமானது . இவ்விடயம் குறித்து அரசாங்கம் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் சிவில் அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தையினை மேற்கொள்வது அவசியமாகும் என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

முத்துறை அதிகாரங்களையும், நாட்டின் சுயாதீனத்தன்மையினையும் பாதுகாக்கும் வகையில் கொழும்பு துறைமுக நகர விவகார பிரச்சினைக்கு அரசியல் மட்டத்தில் தீர்வு காண முடியும் என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் குறித்து விசேட அறிவிப்பொன்றை விடுத்து இதனைக் கூறியுள்ள அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது :

கொழும்பில் நிதி மத்திய நிலையத்தை உருவாக்கும் யோசனையை 2016 ஆம் ஆண்டு அமைச்சரவையில் முன்வைத்தேன்.

இதற்கமைய நிதி மத்திய நிலையத்தை கொழும்பு துறைமுக நகரில் ஸ்தாபிக்க தீர்மனிக்கப்பட்டது.

அந்த நிதி மத்திய நிலையத்துக்கான  சட்டம் உருவாக்கப்பட்டது. ஏனெனில் அது பொருளாதாரத்தின் ஒரு பகுதி.

இலங்கைக்கு சொந்தமான பகுதி ஆகையால் அதற்கான நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க வேண்டிய தேவை காணப்பட்டது.

கொழும்பு துறைமுக நகரின் அபிவிருத்தி நிர்மாண பணிகளை முன்னெடுக்க வேண்டிய  பொறுப்பு ஒப்பந்தகார சீன நிறுவனத்திற்கு உண்டு.

அதனையும் நாங்கள் பாதுகாத்துள்ளோம். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும்  பேச்சுவார்த்தையின் ஊடாக சட்ட வரைபு உருவாக்கப்பட்டது. காலத்திற்கு தேவையான சட்டங்களும் அடிக்கடி உருவாக்கப்பட்டது.

கொழும்பு துறைமுக நகர விவகாரம் தொடர்பில் உருவாக்கப்பட்ட சட்டங்கள்  முத்துறைகளின் அதிகாரங்களையும், சுயாதீனத்தன்மையினையும் பாதுகாத்தது.

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார சட்டமூலம் பாரதூரமானது.

நாடாளுமன்றத்தினதும், நீதிமன்றத்தினதும், அதிகாரங்களை நீக்கி சுயாதீனத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.  உலக நாடுகளில் இவ்வாறான நிலை இதுவரை எங்கும் தோற்றம் பெறவில்லை.

இவ்வாறான நடவடிக்கைகளை  அரசாங்கம் ஏன் முன்னெடுக்கிறது என்பதை அறிந்துக் கொள்வது அவசியமாகும். ஏனைய நாடுகளில் மத்திய வங்கி, அல்லது நிர்வகிக்கும் ஆணைக்குழு  சூதாட்ட மையங்களை அமைக்கும் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. இவ்விரண்டையும் ஒன்றிணைப்பது  இலங்கையில் பண சலவை செய்யும் நோக்கிலா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது.

இரகசியமான முறையில் ஏன் இச்சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்விடயம் குறித்து இரண்டு வருட காலம் பல்வேறுப்பட்ட பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டன.

இச்சட்ட மூலத்தில் நிதியமைச்சு  மலட்டுத்தன்மையாக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சின் அனைத்து அதிகாரங்களும் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க வேண்டும். அரசியல் கட்சி, சிவில் அமைப்புக்கள் அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்குத்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியமாகும் என்றார்.