மீண்டும் பாடசாலைகள் மூடப்படாது-கல்வி அமைச்சின் செயலாளர்

school 1 1
school 1 1

நாட்டில் கொவிட்-19 வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள போதிலும் , பாடசாலைகளை மூடுவதற்கு எதிர்பார்க்கவில்லை.

கொவிட் சவாலுக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி கல்வி நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுக்கவே எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

கொவிட் அச்சுறுத்தல் மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையில் பாடசாலைகளை மூடுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா என்று கேட்ட போதே பேராசிரியர் கபில பெரேரா இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளையும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்ட போது கூட பிரபல பாடசாலைகள் சிலவற்றில் ஒரு சில மாணவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டது.

எனினும் இவர்கள் பாடசாலை சூழலில் தொற்றுக்கு உள்ளாகவில்லை. அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது பெற்றோருக்கு ஏற்பட்ட தொற்றின் காரணமாகவே பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதே போன்று சில ஆசிரியர்களுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டது. இதன் போது ஏனைய மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு துரிதமான செயற்பாடுகள் ஊடாக அனைத்து மாணவர்களதும் கற்றல் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டது. எனவே தற்போதுள்ள சூழலிலும் இதே போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கவே எதிர்பார்க்கின்றோம்.

பெற்றோர்கள் , மாணவர்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை. பாடசாலைகளில் அவசர மருத்துவ தேவைக்கான அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

எனவே மீண்டும் பாடசாலைகளை மூடி மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை இடை நிறுத்துவதை விட சவாலுக்கு மத்தியில் அதனை முன்னெடுத்துச் செல்வதே பொருத்தமானதாக இருக்கும் என்றார்.