மட்டக்களப்பில் 14 , 16 வயது சிறுவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று இன்று சனிக்கிழமை (24) கண்டறியப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 997 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மாணவர்கள் 100 பேருக்கு நேற்று (23) அன்டிஜன், பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் 4 ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து இரு வகுப்பறைகள் மூடப்பட்டு 80 ஆசிரிய மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஆசிரியர் பயிற்சி மாணவர்களின் உறவினர்களான 14, 16 இருசிறுவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அவர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வியாழக்கிழமை மேற்கொண்ட பரிசோதனையில் ஆயித்தியமலை காவல்நிலையத்தில் கடமையாற்றும் இரு காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.