வவுனியாவில் 68 குடும்பங்களை சேர்ந்த 193பேர் சுயதனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார்.
மாவட்ட செயலகத்தில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,……
வவுனியாவில் கடந்தவருடம் 11168 பி.சி.ஆர் பரிசோதனைகளும் இந்த வருடத்தில் 8565 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அந்தவகையில் இதுவரை 436 தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளது. தற்போது வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 528 பேர் வவுனியாவில் அமைந்துள்ள மூன்று தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 68 குடும்பங்களை சேர்ந்த 193பேர் சுயதனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா மூன்றாவது அலை என்ற வகையில் கட்டாயமாக பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள் இருக்கின்றன. ஒரு குடும்பத்தில் இரு நபர்களே வீட்டிலிருந்து வெளியில் செல்வதற்கு அனுமதிக்கப்படுவர். உங்களிற்கு மாவட்ட அல்லது பிரதேச செயலகங்களில் இருந்து கடமைகள் தேவைப்படுமாக இருந்தால். சமுர்த்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்ததர், கிராம சேவகர்களிடம் உங்களது பிரச்சினைகளை நேரடியாக கையளித்து மாவட்டசெயலாளர் அல்லது பிரதேச செயலாளரின் பதிலை பெற்றுக்கொள்ளமுடியும். நகருக்கு வரவேண்டிய தேவையில்லை.
அத்துடன் கற்றல் நடவடிக்கைகள் அதிபர்களிற்கு வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளிற்கமைய நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன் வடக்கிற்கு பிரவேசிக்கும் பிரதான வாயில்களில் பாதுகாப்பு தரப்பினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவர். அவர்களிற்கு உங்களது ஒத்துழைப்புகளை வழங்கவேண்டும். தற்போது நோன்பு கடைப்பிடிக்கப்படுகின்றது. நோன்பு வழிபாடுகளில் 50 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள். திருமண வைபங்களில் 150 பேர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர். மரணவீடுகளில் 25 வீதமானவர்களே கலந்து கொள்ளமுடியும்.
ஒப்பந்ததாரர்கள் தமது பணியினை விதிமுறைகளிற்கு அமைய முன்னெடுத்துச்செல்ல அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கிராமிய மட்டத்திலே குழுக்களை வலூவூட்டுவதன் ஊடாக கிராமங்களின் பாதுகாப்பை முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்புகளை நாடுகின்றோம். இவ்வாறான விதிமுறைகளிற்கு கட்டுப்படுகின்ற சந்தர்ப்பத்தில் தான் எமது மாவட்டத்தினதும் நாட்டினது மக்களினையும் பாதுகாக்க முடியும். என்றார்.