யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும், மன்னார் மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சின்ன வலயன் கட்டு,பெரிய வலயன் கட்டு மற்றும் பரசன் குளம் கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு இன்றைய தினம் சனிக்கிழமை காலை 9 மணி முதல் விசேட மருத்துவ முகாம் இடம் பெற்றது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அனுசரனையுடன் சின்ன வலயன்கட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று சனிக்கிழமை (24) காலை 9 மணியளவில் குறித்த மருத்துவ முகாம் இடம் பெற்றது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் குழுத்தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் இடம் பெற்ற குறித்த மருத்துவ முகாமில் மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சின்ன வலயன் கட்டு,பெரிய வலயன் கட்டு மற்றும் பரசன் குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு மருத்துவ உதவிகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வைத்தியசாலைக்கு செல்ல முடியாத நிலையிலும், உரிய போக்கு வரத்து வசதிகள் இல்லாத நிலையிலும் குறித்த கிராமங்களை சேர்ந்த மக்கள் மருத்துவ தேவைக்காக வைத்தியசாலைகளுக்கு சென்று வர முடியாத நிலை காணப்பட்டது.
இந்த நிலையில் மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மேற்படி மருத்துவ முகாம் ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது.
குறித்த மருத்துவ முகாமில் வைத்தியர் பசில் மற்றும் சுகாதார பணி உதவியாளர்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துவ உதவிகளை வழங்கியுள்ளனர்.
குறித்த மருத்துவ முகாம் கடந்த வாரம் மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தச்சனா மருத மடு கிராமத்தில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது