மாகாணசபைத் தேர்தல் இவ்வருடத்தில் இடம்பெறுவதற்கான சாத்தியமில்லை – திஸ்ஸ விதாரண

திஸ்ஸ விதாரண
திஸ்ஸ விதாரண

மாகாணசபை தேர்தலை இவ்வருடம் நடத்தவதற்கான சாத்தியம் கிடையாது.  தேர்தல் முறைமை குறித்து பிரதான கட்சிகளின் ஆலோசனைகளை மாத்திரம் கோராமல் சிறு கட்சிகளின் ஆலோசனைகளையும்  கோருவது அவசியமானது. 

மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்த லங்கா சமசமாஜ கட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என  லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மாகாண சபை தேர்தலை நடத்துவதில் பல சிக்கல் நிலை காணப்படுகிறது. . தேர்தலை விரைவாக நடத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் வெற்றிப் பெறாத அளவிற்கு பல பிரச்சினைகள் ஏதாவதொரு வழியில் தோற்றம் பெறுகிறது.  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன்  பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து இப்பிரச்சினைக்கு தீர்வுகாண  எதிர்பார்த்தோம் அதுவும்  வெற்றிப்பெறவில்லை.

மாகாண சபை தேர்தல் உட்பட  பல பிரச்சினைகளுக்கு   தீர்வுகாண பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க பங்காளி கட்சி தலைவர்கள் அனுமதி  கோரியுள்ளார்கள். எதிர்வரும் வாரம் பிரதமருடன் பேச்சுவார்த்தைக்கு அனுமதி கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கிறோம்.

மாகாண சபை தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான  சாத்தியப்பாடுகள் ஏதும்  கிடையாது. தேர்தல் முறைமை தொடர்பில் கட்சி தலைவர்கள் இதுவரையில் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை. 

மாகாண சபை தேர்தல் தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனை முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது.  

யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு சில விடயங்களுக்கு 11 பங்காளி கட்சி தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். மாகாண சபை தேர்தலில் உள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் தேர்தலை நடத்த முடியாது.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளை பெறுவதுடன் , சிறு கட்சிகளின் ஆலோசனைகளையும் பெற வேண்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை தேர்தல் முறைமை கொண்டு வரப்பட்டது. ஆகவே மாகாண சபை தேர்தல் தொடர்பில் தமிழ்- முஸ்லிம் அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியமாகும்.

மாகாண சபை தேர்தலில் காணப்படும் சிக்கல் நிலைக்கு தீர்வு கண்டு தேர்தலை விரைவாக நடத்த லங்கா சமசமாஜ கட்சி முழுமையான ஆதரவை வழங்கும். மக்களின் ஜனநாயக தேர்தல் உரிமையினை பாதுகாப்பது அனைத்து தரப்பினது பொறுப்பாகும் என்றார்.