‘சிறிய சூறாவளித் தாக்கமே’ – சிறிகாந்தா அணியின் பிளவு தொடர்பில் செல்வம்

telo jaffna
telo jaffna

தமிழீழ விடுதலைக் கழகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்ததமை எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே எமது கட்சி இப்போதும் மிக பலமாகவே உள்ளது என தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் இருந்து எமது கட்சியில் இருந்து ஒருவர் பாராளுமன்றம் செல்ல தொண்டர்கள் அயராது உழைக்கவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் தமிழீழ விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் அங்கு தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைக் கழகத்தில் இருந்து சிலர் விலகி சென்றுள்ளனர்.அவ்வாறு சென்றவர்கள் புதிய கட்சியை ஆரம்பித்தும் உள்ளனர்.இது எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே.எனினும் எமது கட்சி மிக பலமாகவே உள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட முன்னின்று செயற்பட்ட கட்சி எமது கட்சி மட்டுமே.எமது கட்சியில் இருந்து எங்களை உருவாக்கிய எம்மை வழிநடத்திய முன்னாள் பொதுச் செயலாளர் சிறிகாந்தா சிறிய விடயத்திற்காக பிரிந்துள்ளமை கவலையளிக்கின்றது. தமிழரசுக் கட்சியின் மீது கோபத்தில் அவர்களுடன் இணைந்து செயற்பட முடியாது என தனிக் கட்சியை ஆரம்பித்துள்ளார்.இது எமக்கு வருத்தத்தைத் தருகின்றது.

எங்களின் நிலைப்பாடு 5 தமிழ்த் தேசியக் கட்சிகளும் முன்னரைப் போல இணைந்து மிக பலமாக செயற்பட வேண்டும் என்பதே.நாம் ஒற்றுமையையே விரும்புகின்றோம்.அப்படியானால் தான் நாம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் 22 ஆசனங்களைப் பெற முடியும். இதனை விடுத்து தமிழர்களிடையே புதுப் புது கட்சிகள வரும் போது வாக்குகள் சிதறும். இதனால் தென்னிலங்கையில் உள்ள சிங்கள கட்சிகள் ஆளுமை காலூன்றும் நிலைமை உருவாகும். அவ்வாறு நடக்குமேயானால் தமிழர்களின் பூர்விகமாக வடக்கு கிழக்கு பிரதேசம் கேள்விக் குறியாகும்.நாம் வாழ்ந்த வரலாறுகள் மழுங்கடிக்கப்படலாம். இது ஏன் முன்னாள் பொதுச் செயலாளர் சிறிகாந்தாவுக்கு தெரியவில்லை. ஆனால் ரெலோவில் இருந்து அவர் போய் விடடார் என்பதற்காக ரெலோ பலவீனம் அடையவில்லை.எமது கட்சி பலமாகவே உள்ளது. அவர் கட்சி தொடங்குவது அவரின் ஜனநாயக உரிமை.

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இதுவரை காலமும் ரெலோவில் இருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட தெரிவாகவில்லை என்ற கருத்தை முறியடித்து எமது கட்சியில் இருந்து ஒருவரை அனுப்பி வைக்க வேண்டும். அதற்காக கட்சியின் உறுப்பினர்கள்,தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும்.கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாராளுமனற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு மக்கள் வாக்களிக்கவில்லை.மாறாக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்ப்பாளர் சஜித்திற்கே வாக்களித்தனர்.இந்த தேர்தல் தமிழர்களுக்கு ஓர் செய்தியை கூறி சென்றிருக்கின்றது மைத்திரியை ஜனாதிபதியாக்கும் அதிகாரம் தமிழ் மக்களாகிய எம்மிடம் இருந்தது. இதனை அறிந்த சிங்கள மக்கள் இம்முறை எமக்கு அதனை தர கூடாது என எண்ணியே கோடாபயவுக்கு வாக்களித்துள்ளனர்.எனவே நாம் ஒற்றுமையுடன் பலமாகச் செயற்பட வேண்டும் என்றார்.