வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா!

115214296 115179027 gettyimages 1208505324 1
115214296 115179027 gettyimages 1208505324 1

யாழ்ப்பாண மாவட்டத்தில் 37 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடம், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆகிய இரண்டு ஆய்வுகூடங்களில் 824 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 43 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 37 பேருக்கும் கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் தலா மூவருக்கும் என 43 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொடிகாமம் வர்த்தகத் தொகுதியில் வர்த்தகர்கள், பணியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 21 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் 30 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண சிறைச்சாலையில் 8 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற 6 பேருக்கு தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

வவுனியா பூவரசங்குளம் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் கண்காணிக்கப்பட்ட மூவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.