இரணைதீவில் கடற்படையினர்,காவல்துறையினர் உட்பட 24 பேரூக்கு பீ.சி.ஆர்.பரிசோதனை

IRANAI TIVU 5 05 2021 2 1
IRANAI TIVU 5 05 2021 2 1

இரணைதீவில் சுய தனிமைப்படுத்தப்பட்ட சுமார் 24 பேருக்கு இன்றைய தினம் புதன்கிழமை(5) காலை பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரீ.வினோதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவில் இருந்து தலைமன்னார் பகுதிக்கு சட்ட விரோதமான முறையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வருகை தந்த நிலையில் கைது செய்யப்பட்ட 2 நபர்களும், அவர்களை அழைத்து வந்தவர்கள் என 3 நபர்களுக்கும் இன்றைய தினம் புதன் கிழமை (5) சுய தனிமைப்படுத்தப்பட்ட இரணைதீவு பகுதியில் வைத்து பீ.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து வருகை தந்தவர்களில் ஒருவர் ஏற்கனவே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஏனைய 3 நபர்களுக்கும் இன்று பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் உட்பட குறித்த 21 பேருக்கும் இவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இரணை தீவு பகுதியில் குறித்த பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனை மாதிரிகள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

நேற்று செவ்வாய்க்கிழமை (4) மன்னார், நானாட்டான் பகுதிகளில் சுமார் 416 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் கொழும்பில் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.