அரசாங்கத்தை வழிப்படுத்த ஊடகங்களின் அழுத்தம் அவசியம்

gota 2
gota 2

அரசாங்கம் ஒன்றினை சரியான பாதையில் வழிநடத்த ஊடகங்களும் அழுத்தங்களை பிரயோகிக்க முடியுமெனவும் தற்போதைய அரசாங்கம் அரச ஊடக நிறுவனங்களும் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செயற்படக்கூடிய சூழலை உருவாக்கி வருவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்கள் தெரிவித்தார்.

விமர்சனங்களை எதிர்பார்க்கும் அதேவேளை அவை அரசாங்கத்தின் பயணத்திற்கு பக்கபலமாக அமையுமென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள்இ அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஊடகங்கள் உண்மையான விடயங்களையே வெளிப்படுத்த வேண்டுமென எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இன்று (16) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

ஊடகங்கள் பக்கச்சார்பற்று நடுநிலையாக செயற்படட்டு ஊடகப் பணியை ஆற்றவேண்டியது அவர்களது கடமையாகுமெனவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெளிவுபடுத்தினார்.

சிறந்த அரச சேவை ஒன்றினை உருவாக்குவதற்கு அரச சேவை தொடர்பில் மக்களிடம் காணப்படும் எதிர்மறை எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை ஏற்படுத்துவதற்கு ஊடகங்களால் மேற்கொள்ளக்கூடிய அழுத்தங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்கள்இதன்போது தெளிவுபடுத்தினார்.

தற்போதைய அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச்சலுகை தொடர்பில் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் அரசாங்கத்தினை பொறுப்பேற்ற மிக குறுகிய காலத்திற்குள் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளபோதிலும் அதன் நன்மைகள் இன்னும் மக்களை சென்றடையவில்லை என தெரிவித்தார்.

‘வரி குறைப்பு காரணமாக பல நிறுவனங்கள் பெருமளவு இலாபத்தினை பெற்றுக்கொண்டுள்ளபோதிலும் மக்களுக்கு அந்த நன்மைகள் இன்னும் கிடைக்கவில்லை. அரசாங்கம் வழங்கிய வரிச்சலுகை காரணமாக இரும்பு ஆணியின் விலைகூட குறைவடைய வேண்டும்’ என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

வரிச்சலுகைகளின் நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்காத பாரியளவிலான நிறுவனங்கள் மற்றும் சிறியளவிலான வர்த்தகர்கள் பற்றிய தகவல்களை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

எம்சிசி ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்கு நிபுணர் குழுவொன்றினை நியமிப்பது அவ்வொப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் சரியாக இனங்கண்டு கொள்வதே அதன் நோக்கமாகுமெனக் குறிப்பிட்டார்.

சுவிஸ் தூதரக குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் கிடையாது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய மறுக்க முடியாத ஆதாரங்களினால் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளிநாட்டு ஊடகங்களால்வெளியிடப்பட்ட செய்திகளின் ஊடாக இந்த நிகழ்வின் பின்னணியில் சூழ்ச்சி ஒன்று காணப்பட்டமை தெளிவாகின்றது’

‘பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தல் உண்மைத்தன்மையை கண்டறியாது போலிப் பிரசாரங்களை மேற்கொள்ளுதல் ஆகியன தற்போதைய அரசியல் கலாசாரத்தின் பிரதான அம்சங்களாகும். மக்கள் இந்த மோசமான நடத்தையினை மறுத்து வருகின்றனர். இந்த கலாசாரத்தினை இல்லாதொழிக்கவே நானும் முயற்சிக்கின்றேன்’ என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

எதிர்வரும் மார்ச் மாதத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தலை நடாத்தியதன் பின்னர் மாகாண சபை தேர்தலை நடாத்த எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின்போது 2/3 பெரும்பான்மையினை பெற்று நிலையான அரசாங்கத்தினை அமைக்க ஜனாதிபதி என்ற வகையில் அர்ப்பணிப்புடன் செயற்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

19வது அரசியலமைப்பு திருத்தம் காரணமாக அரசாங்கத்தினை கொண்டு செல்வதில் எதிர்நோக்கக்கூடிய சிரமங்களை கடந்தகாலமே உறுதிப்படுத்தியுள்ளது. அரசியல் முதிர்ச்சி பெற்ற தலைவர்களால் அத்தகைய திருத்தமொன்று மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் தான் புதுமையடைவதாக தெரிவித்தார்.

காணாமற்போனோர் பிரச்சினை அரசியல்மயமாக்கப்பட்டமையினால் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் வடக்கில் உள்ள சில அரசியல் குழுக்கள் தமது அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக இந்த பிரச்சினையை உபயோகித்து வருவதாகத் தெரிவித்தார்.

‘நாட்டின் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்படும்போதே தேசிய ஒற்றுமை பேணப்படும். நாட்டின் பாதுகாப்பு முதலிடம் வகிப்பதோடு அதற்கான சூழல் உறுதியாக கட்டியெழுப்பப்படும்.’ என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். முப்படைத் தளபதிகள்இ புலனாய்வுத்துறை பிரதானிகள் தொடர்பில் தான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதோடுஇ அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் அவர்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

‘இதுவரை ஆட்சிபுரிந்த அனைத்து அரசாங்கங்களும் அரசியல் இலாபம் கருதியே அதிகார பகிர்வு தொடர்பில் கதைத்தனர். அனைத்து பிரஜைகளும் கௌரவமாக வாழவேண்டுமாயின் அவர்களுக்கான தொழில், பிள்ளைகளுக்கான கல்வி மற்றும் சிறந்த சுகாதார வசதிகள் அவர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும். எனவே அதிகாரப் பகிர்வினைக் காட்டிலும் சிறந்த வாழ்க்கைத்தரத்தினை ஏற்படுத்த வேண்டியதே மக்களின் தேவையாகும்.’ என அவர் மேலும் தெரிவித்தார்.

வர்த்தக நடவடிக்கைகளை விட தேசிய பாதுகாப்பு தொடர்பிலேய அதனை தான் நோக்குவதாகவும் நாட்டின் அனைத்து துறைமுகங்களும் இலங்கை அரசாங்கத்தின் கீழ் செயற்பட வேண்டுமென்பதே தனது எண்ணமாகுமென குறிப்பிட்டார்.

பொலிஸ் ஊடக நிலையம் நீக்கப்பட்டுள்ளமையினால் தகவல்களை உறுதி செய்து கொள்வதில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து தமது எண்ணங்களை அன்றி உரிய விடயம் பற்றிய சரியான பிரகடனங்களை வெளியிடக்கூடிய ஊடக நிலையமொன்றினை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.