கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் நேற்று(09) காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இது கொவிட் தொற்றால் இலங்கையில் ஏற்பட்ட இரண்டாவது கர்ப்பிணி மரணமாக கருதப்படுகிறது
இவ்வாறு உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் உடல், தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கமைய, நேற்று மாலை தடல்ல தகனசாலையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது
இவ்வாறு உயிரிழந்தவர், அக்குரஸ்ஸ, வில்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதான பெண்ணொருவராவார்.
இப்பெண், தான் முதல் தடவையாக கருவுற்றதை கொண்டாடுவதற்காக கடந்த புத்தாண்டு தினத்தில் அவரது வீட்டில் விருந்துபசார நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதில் அதிகளவானோர் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவர் தனது பணி இடத்துக்கு சென்றிருந்தபோது, அவரது தாயாருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.
இதனால் குறித்த கர்ப்பிணிக்கும் பீ.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, அவரும் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக இப்பெண் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சுவாசக்கோளாறு ஏற்பட்டதால் உடனடியாக எக்மோ சிகிச்சைகளுக்காக கடந்த 29 ஆம் திகதி அவர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இவ்வாறு எக்மோ கருவி மூலம் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கருவில் உள்ளபோதே உயிரிழந்த குறைமாத சிசுவை நேற்று முன்தினம் பிரசவித்தார். பின்னர் அவரும் உயிரிழந்தார்.
இப்பெண்ணின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரத்தில் கலந்துகொண்டவர்களுக்கு அத்துரலிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைகளில் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.