மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம்!

Kotta
Kotta

இம்மாதம் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

கொவிட் கட்டுப்பாடு தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேற்று(10) இடம்பெற்ற கலந்துரையாலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறித்த பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் தினம் விரைவில் அறிவிக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்கு இது தடையாக இருக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், இந்த கட்டுப்பாடுகளின் போது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், நாட்டின் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் பராமரித்துச் செல்ல உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் ஒன்று கூடும் வகையில் இடம்பெறும் விருந்துபசாரங்களை ரத்துச் செய்வதற்கும், வர்த்தக நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் மற்றும் அங்கு இருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய தொற்றுக்கு உள்ளானவர்கள் அதிகளவில் கண்டு பிடிக்கப்படுகின்ற பகுதிகளை தனிமைப்படுத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதற்கும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.