கொரோனா தொற்றை பரிசோதிக்கும் 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான பிசிஆர் இயந்திரம் ஒன்றை அன்பளிப்பாக பிரபல வர்த்தகர் கலாநிதி பி. நல்லரெத்தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை (14) மாவட்ட செயலகத்தில் வைத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் வழங்கி வைத்தார்.
மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியினர் கொரோனா பரிசோதிக்கும் இயந்திரம் தேவை எனவும் இந்த இயந்திரம் இருந்தால் அதிகளான பிசிஆர் பரிசோதனை செய்யமுடியும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து குறித்த இயந்திரத்தை என் கே டி, ரட்ணம் பிறைவேற் லிமிட்டட், எஸ். கே. ஜல்சன் பிறைவேற் லிமிட்டட் ஆகிய கம்பனிகளின் உரிமையாளரான கலாநிதி பி. நல்லரெத்தினம் கொள்வனவு செய்து அன்பளிப்பாக தர முன் வந்தார்.
குறித்த இயந்திரத்தை உத்தியோக பூர்வமாக வழங்கிவைக்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணிக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள இராணுவத் தரப்பு பிரதானி 23 வது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்த,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி.க.கலாரஞ்சினி, நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் பி.தேவகாந்தன் ஆகியோரிடம் என்.கே.டி ரத்ணம் பிறைவேற் லிமிட்டட் கம்பனி, எஸ்.கே.ஜீலன் பிறைவேட் லிமிட்டட் கம்பனி உரிமையாளர்களான கலாநிதி. பி.நல்லரெத்தினம், எஸ். ஜீலன், முகாமையாளர் என்.டிலக்ஜன், குறித்த இயந்திரத்தை கையளித்தனர்
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் காவற்துறைமா அதிபர் லக்சிறி விஜயசேன, 231 வது படைப்பிரிவின் விறிகேட் கொமாண்டர் வீ.எம்.என்.எட்டியாராச்சி, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதேச செயலாளர்களான திருமதி.ந.சத்தியானந்தி மற்றும் வீ.வாசுதேவன், ஆகியோர் கலந்து கொண்டனர்.