வவுனியா பட்டானிச்சூரில் காவல்துறையினர் சுகாதார பரிசோதகர்கள் திடீர் கண்காணிப்பு

IMG20210515110829 01
IMG20210515110829 01

வவுனியா பட்டானிச்சூர் கிராமத்தில் காவல்துறையினர் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் திடீர் கண்காணிப்பு நடவடிக்கை இன்று (15.05) மேற்கொள்ளப்பட்டதுடன், பலருக்கு எதிராக முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டது.

இலங்கையில் கொவிட் தொற்று பரவலானது தற்போது தீவிரமடைந்து வருவதையடுத்து நாடு முழுவதும் 3 நாட்கள் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அத்தியாவசிய சேவைகள், மருந்தகங்கள் என்பனவற்றிக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் முஸ்ஸிம் மக்களின் நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றன. இதனையடுத்து, வவுனியா பட்டானிச்சூர் கிராமத்திற்கு சுகாதார பிரிவினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து திடீர் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த கிராமத்தில் முகக்கவசமின்றி பொது இடத்தில் விளையாட்டில் ஈடுபடல், மக்கள் ஒன்றுகூடி இருந்தமை, வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தமை என பல்வேறு செயற்பாடுகளில் அரச பயணத் தடை உத்தரவு மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக முறைப்பாடுகளும் பதியப்பட்டன.

அத்துடன், வாகன ஆசனத்திற்கு மேலதிகமாக மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டியில் பயணம் செய்தவர்களும் வழிமறிக்கப்பட்டு கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டனர்.