ஆசிரியர் மற்றும் அதிபர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாக கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அளகப்பெரும தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் மற்றும் அதிபர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர் டளஸ் அளகப்பெருமவிற்கிடையிலான சந்திப்பு இடம்பெற்றிருந்தது,
இலங்கை ஆசிரியர் சேவை மற்றும் இலங்கை அதிபர்களின் சேவையை மூடிய சேவைகளாக மாற்றுவதுடன் அதற்கான உரிய சம்பள கட்டமைப்பை மேற்கொள்வதற்கு அதிக காலம் தேவைப்படுவதால், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால சம்பள பரிந்துரையை அமுல்படுத்துவது தொடர்பான விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
தேசிய பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிக்கின்ற தேர்வின் போது இடம்பெற்ற முறைகேடுகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.
பாடசாலைகளில் பணம் அறவிடுதல், பாடசாலை ஆவண நடவடிக்கைகள், மற்றும் விண்ணப்பங்களை நிரப்புதல் போன்றவற்றின் காரணமாக ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்முறை தடைபட்டுள்ளதால் அதற்கு கல்விசாரா ஊழியர்களை நியமித்தல், தேசிய பாடசாலைகளில் அதிபர்களின் வெற்றிடங்களை பூர்த்தி செய்தல் ஆகியன குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிலையில் இவைகள் குறித்த பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து மிக விரைவில் தீர்மானத்தினை பெற்றுத்தருவதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.