யாழ் மாவட்டத்தில் கொரோனா நிலைமை சற்று அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்….
நேற்று இரவு கிடைத்த பி.சி.ஆர் பரிசோதனையின்படி யாழில் 27 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.
யாழ் மாவட்டத்தில் இன்றுவரை தொற்றுக்குள்ளானோர் 2729 ஆக காணப்படுகின்றது. தற்போது வரை 36 மரணங்கள் பதிவாகியுள்ளன.
2526 குடும்பங்களைச் சேர்ந்த 6331 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
அதேநேரத்தில் நடமாடும் விற்பனை நிலையங்கள் ஊடாக பொது மக்களுக்கு அனைத்து கிராமங்களிலும் உணவுப்பொருட்கள் விநியோகிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை தவிர ஏனைய மிக அத்தியாவசியமான வைத்தியசாலை செல்வோர் விமான நிலையங்களுக்கு செல்வோர் போன்றவர்களுக்கு மாத்திரம் பயணத்தடை அனுமதி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்படுகின்றது.
இந்த அபாயமான நிலைமையினை கடந்து செல்வதற்கு அனைவரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும் எனவே பொதுமக்கள் இந்த அசௌகரியமான நிலையை அனுசரித்து சற்று பொறுமையாக செயற்படுவதன் மூலம் எமது பிரதேசத்தினை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும் என தெரிவித்துள்ளார்.